பெங்களூரு: காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜ. சென்றவர்களுக்கு அங்கு மரியாதை கிடைக்கவில்லை. இதனால் மறுபடியும் கட்சிக்கு வரவுள்ளனர் என்று முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான யு.டி.காதர் தெரிவித்தார்.
காங்கிரஸ் அலுவலகத்தில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ. மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு கனவில் கூட காங்கிரஸ் பெயர் வருகிறது. இதனால் எந்த சம்பவம் நடந்தாலும் காங்கிரஸ் மீது பழி சுமத்தும் வேலையை வழக்கமாக வைத்துள்ளார். மாநிலத்தில் நடைபெறவுள்ள கிராம பஞ்சாயத்து தேர்தலில் வாக்காளர்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜவுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பா.ஜ. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. பா.ஜ. அரசு அமைந்த பின் அதானி, அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி பா.ஜ. சென்றவர்களுக்கு அங்கு மரியாதை கிடைக்கவில்லை. இதனால் மறுபடியும் கட்சிக்கு வரவுள்ளனர் என்றார்.